பாட்டி வைத்தியம்

இன்றைய காலகட்டத்தில் நாம் எதற்கெடுத்தாலும் வைத்தியசாலையை நாடி ஒடுகின்றோம். அது தவறல்ல.. ஆனால் எம் முன்னோர்கள் மூலம் பழக்கத்தில் வந்து கொண்டிருக்கும் சில் கைவைத்திய முறைகளை நாம் கடைப்பிடித்துப் பார்த்தால் சில வேளைகளில் வைத்திய செலவைக் குறைத்துக் கொள்வதுடன் பக்கவிளைவற்ற மருந்துகளையும் நாம் உட்கொள்ளலாம்.

இதோ சில அனுபவ வீட்டு வைத்திய முறைகள்......

சிலருக்குப் பார்த்தால் தலையிடி ஒரு பெரிய தலைவலியாக இருக்கும். அப்படியாயின் அடிக்கடி மாத்திரைகளை உட்கொள்ளாமல் , வேர்க்கொம்பு தெரியும் தானே அந்த வேர்க்கொம்பு பவுடரை எடுத்து அத்தோடு தேசிப்புளி கலந்து பசைபோன்று வந்தவுடன் அதனை நெற்றியில் நன்றாக பரப்பி பூசி விடவும். பின்பு நெற்றியில் பூசிய வேர்க்கொம்பு காய்ந்தவுடன் நீங்களே தலைவலி போயிருப்பதை உணருவீர்கள்.

இருமல், சளி என்பன வந்து விட்டால் வெற்றிலை எடுத்து சிறிது நெருப்பில் வாட்டி இளஞ் சூடாக அந்த வெற்றிலை மீது விக்ஸ் பூசி நெஞ்சில் வைத்தால் அந்த வெற்றிலை நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும். இப்படி தொடர்ந்து நாளுக்கு ஒருதரம் செய்து வந்தால் சளி குறைவதை உணரலாம்.

மேலும் பசும் பாலில் சிறிது முழு மிளகு போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்பு சிறிது கறிமஞ்சள் போட்டு சூடாற விட்டு இளஞ்சூடாக குடித்தால் இருமல் குறையும்.

சிறிதளவு தேனுடன் சுடுதண்ணீர் கலந்து சிறிது கற்கண்டும் போட்டு குடித்தால் சளி குறைவடையும்.

தொண்டை கட்டினாலோ அல்லது தொண்டை நொந்தாலோ நல்லெண்ணை சிறிதளவு எடுத்து சூடுகாட்டி அதனுள் கற்பூரம் சிறிதளவு போட்டு கற்பூரம் கரையும் வரை சூடேற்றி பின்பு இளஞ்சூடாக தொண்டைப் பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் பூசி வந்தால் சுகம் வரும்.

என்ன? இதில் உள்ளதெல்லாம் இலகுவானது தானே...... Try  பண்ணிப் பாருங்க...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More